Wednesday 2 September 2015

குதிரைக் கதை


வீட்டுப் பக்கத்தில ஒரே ஒரு கடை இருக்கு. அந்தக் கடையில போய் கொஞ்சம் காய்கறிகள வாங்கிட்டு திரும்பி வரும் போது பார்த்தா ஒரே குதிரைக் கூட்டம்.
கலர் கலரா அழகா குட்டிகளோடு பார்க்க அழகாவும் பயமாவும் இருந்துச்சி. பின்னே ஒன்னை ஒன்னு விரட்டிக்கிட்டு ஓடினா பயமா தானே இருக்கும். போட்டோ எடுக்கும் வசதி இல்லா வருத்தம் வேறு. வீட்டுக்கு வந்தும் குதிரை ஞாபகம் தான்.

பழைய கதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. 
**********************

ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். ரெண்டும் நல்ல நட்பா இருந்தது. ஒரு நாள் குதிரைக்கு உடம்புக்கு முடியாமப் போய்ட்டு. விவசாயி டாக்டரை வரவழைத்து மருந்து கொடுக்கச் சொன்னார்.

குதிரையைப் பார்த்த டாக்டர் அதுக்கு வைரஸ் நோய் வந்திருக்கு. மூன்று நாள் மருந்து தாறேன். அப்படியும் குணம் ஆகலைனா இனி பிழைக்காதுனு சொல்லிட்டார்.

குதிரையின் நண்பன் ஆட்டுக்கோ ஒரே கவலை. நம்ம நண்பனுக்கு இப்படி ஆயிட்டேனு.

விவசாயி முதல் நாள் மருந்து கொடுத்தார். குதிரைக்கு எழுந்து நிற்க கூட முடியவில்லை. இன்னும் இரண்டு நாள் இருக்கு அதற்குள் சரியாகா விட்டால் உன்னை நம்பி உபயோகம் இல்லைனு சொல்லிட்டு போய்ட்டார்.

ஆடு தன் நண்பனைப் பார்த்து நண்பா கவலைப் படாதே. மெதுவா எழுந்து நிற்க முயற்சி செய். உன் முயற்சி உன்னை எழுந்து நிற்கச் செய்யும் . நீ எழுந்து நடக்கா விட்டால் உன்னை கொன்று விடுவார்கள் என்று குதிரைக்கு ஊக்கம் கொடுத்தது.

மூன்றாம் நாள் மருந்தும் கொடுத்தாச்சி. டாக்டர் விவசாயிடம் நாளைக்குள் எழுந்து நடக்கா விட்டால் குதிரையை கொன்று விடுங்கள். இல்லையென்றால் வைரஸ் மற்றவர்களுக்கும் பரவி விடும்னு சொல்லிட்டுப் போய்ட்டார்.

மருத்துவர் சென்றதும் ஆடு குதிரையிடம் நண்பா எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள் என்றது.

குதிரை மெதுவா கஷ்டப் பட்டு எழுந்து நடக்கத் தொடங்கியது.
நடந்ததோடு அல்லாமல் ஓடவும் துவங்கியது. அந்தப் பக்கம்
தற்செயலா வந்த விவசாயி குதிரை ஒடுவதைப் பார்த்து சந்தோஷத்தில் உடனே டாக்டருக்கு போன் செய்து 

"டாக்டர் நீங்க கொடுத்த மருந்தால் என் குதிரை நல்லா குணம் ஆயிட்டு. என் குதிரையை பிழைக்க வைத்த உங்களுக்கு விருந்து ஏற்பாடு பண்ணுறேன் உடனே வாங்க" என்றான். 

குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து நடந்தாலும் டாக்டர் கொடுத்த மருந்தால் தான் குதிரை குணமடைந்ததா நினைத்தான்.

குதிரை நல்லா குணம் அடைந்தாலும் நண்பனை பிரிந்த கவலையில் மனதால் மிகவும் கஷ்டப்பட்டது. விருந்துக்குப் பலியான நண்பனை நினைத்து கண்ணீர் விட்டது.

2 comments:

  1. nalla kathai. mudivu thaan ethirpaarkaathathu.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தெரியாமல் இப்படி தான் நல்ல நட்பை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

      Delete