Tuesday 14 July 2015

அழ மடி வேண்டும்


அழுவது சுகம் என்றா அழுதுக்கொண்டிருக்கிறேன். 
ஆணவம் உடைந்தால். அமைதி தான் வரும். 
ஆனால் எனக்கு அழுகை தான் வந்தது.

மாலை ரோஜா ஒளியோடு சன்னல் சுட்ட நேரம் 
என்னுள் ஒரு மூர்க்கம்
நேசித்தவர்களை நேசிப்பவர்களை மட்டுமல்ல
நேசத்தையும் தாக்கினேன்.

சாகவேண்டும் என்ற வெறி.
அழுகை வரவில்லை ஆத்திரம் தான் வருகிறது.
தன்னையே கக்கிக் கொள்ளும் எரிமலையின்
தன்மானமும் தைரியமும் இல்லாத நான்
காகிதத்தில் மையோட்டுவதைத் தவிர
வேறு என்னசெய்ய முடியும்.

அதோ வானத்தில் வேகமாகப் போகும்
பறவைக்கும் இப்படியொரு நாள் நேர்ந்திருக்கலாம்.
கண்வழி நீராகவோ கைவழி எழுத்தாகவோ
காட்ட கூடாது என்ற வைராக்கியமும்
மனம் முழுக்கக் குளமாகித் தேங்கி கிடைக்கிறது.

தனிமைக்கு தைரியம் போனால்
அழ மடி வேண்டும்.
அரண்டிருக்கும் போது
அண்டிக் கொள்ள கை வேண்டும்.
எடுத்து அடிவைக்க எக்கி விடும் கால் வேண்டும்.
எல்லாவற்றிற்கும் ஒர் ஆறுதல் பிடி வேண்டும்.
அப்படி வந்தது தான் இந்த வரிகள்.

பிழையிருக்க மன்னிக்கவும்.


*** பூங்கோதை*****

No comments:

Post a Comment