Wednesday 21 October 2015

சரஸ்வதி பூஜை


"மங்கள ரூபிணி மதியணி சூலிணி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி செளந்தரியே
கங்கண பாணியள் களிமுகங் கண்ட நல் கற்பக காமினியே
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி....."

மனசு கவலைப் பட்டு கிடக்கும் போது இப்படி தான் முணுமுணுத்துக்கிட்டு இருப்பேன்.

ரெண்டு வரி பாடும் போதே மனப் பாரம் எல்லாம் பறந்த மாதிரி இருக்கும். இப்பல்லாம் பாடுறதையே விட்டுட்டேன். சூழ்நிலை அப்படி ஆயிட்டு.

பாடுறதை விட்டாலும் என் பக்கத்தில் எப்பவும் எப் எம் ஓடிக்கிட்டே தான் இருக்கும். எனக்கு டீவி பார்ப்பதை விட பாட்டுக் கேட்பது ரொம்ப பிடிக்கும்.

நவராத்திரி ஆரம்பிச்சிட்டா முதலில வீட்டை சுற்றி ஸ்பீக்கர் கட்டுற வேலை தான் மும்முரமா நடக்கும்.

இங்க பக்கத்தில் ரெண்டு மூணு வீடுகளில் நவராத்திரி கொலு வைச்சிருக்காங்க. கொலு வைக்கிறதுக்கு முன்பே வீட்டுக்கு கூப்பிட்டாங்க. ஆனா நான் போகலை மனசு பூரா பாரமா இருந்தது.

கோயிலுக்கு போனாலே என்னை அறியாமல் அழுகை வந்துடும். சாமிகிட்டயே மனசால் சண்டை போடுவேன். ஒரு வீட்டுக்கு போய் அங்கு இருக்க கொலுவில் போய் சண்டை போட வேண்டாம்னு போகலை. நேற்று கட்டாயப் படுத்தி கூப்பிட்டதால் வாறேன்னு சொல்லியிருந்தேன்.

கொலு பார்க்க போகும் போது எப்படி சும்மா போகனு ரெண்டு காமதேனு பொம்மையும், ரெண்டு விளக்கு பொம்மையும் வாங்கிட்டு போனேன்.

எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். அவுங்க வீட்டில் இல்லாத பொம்மை என்றதும் கூடுதல் சந்தோஷம்.

வீட்டில் கொலு வைக்கும் போது பிள்ளைகள் நிறையப் பேர் வருவாங்க. எல்லார் கையிலும் பாட்டு புக் கொடுத்து பாட வைப்பேன். போட்டிப் போட்டு பாடுவாங்க. தினமும் கொலுவில் பூஜை செய்யும் போது தான் நான் பாடுவேன்.

நேற்று கொலு வைத்திருந்த வீடுகளில் அப்படி ஒரு அமைதி. எந்த ஆடம்பரமும் இல்லாமல் சிம்பிளா கொஞ்ச பொம்மைகள் மட்டுமே வைத்து வந்தவங்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுப்பினாங்க. எனக்கு என்னோட வீட்டு ஞாபகம் வந்து கஷ்டமா இருந்தது. ரெண்டு வீட்டில் அமைதியா கொலுவைப் பார்த்துட்டு மூணாவதா ஒரு வீட்டுக்கு போனால் அலமாரியில் சின்ன சின்ன பொம்மைகளை வைத்து சீரியல் பல்பு மாட்டி தோரணைகளை கட்டி தொங்க விட்டுருந்தாங்க. ஒரு பாட்டிமா கையில் அம்மன் பாட்டு புக்கோடு கண்ணாடி போட்டு விரலால் வார்த்தைகளை தடவி மனதால் பாடிக்கிட்டு இருந்தாங்க.

எனக்கோ பாட ஆசை. மெதுவா பேச்சிக் கொடுத்து அம்மா கொஞ்சம் சத்தமா பாடினா கொலுவில் இருக்கும் அம்மனுக்கும் எங்களுக்கும் கேட்குமே. ஏன் மனசுக்குள்ளே பாடுதிங்கனு கேட்டேன்.

என்னோடு பாட ஆள் இல்லைமா. நான் பாடினா கேட்கவும் ஆள் இல்லைனாங்க. எனக்கு கஷ்டமா போயிட்டு.கவலை படாதிங்கம்மா எனக்கு பாட்டுனா ரொம்ப பிடிக்கும். நீங்க பாடுங்க நான் கேட்கிறேனு சொல்லி பாட வைச்சேன்

அந்த அம்மாவின் குரலில் மயங்கியது கொலுவில் உள்ள பொம்மைகள் மட்டுமல்ல நானும் தான். என்னை மறந்து பாட ஆரம்பிச்சிட்டேன்.

"தண தண தந்தன தவிலொளி முழங்கிட தன் மணி நீ வருவாய்
கண கண கங்கண கதிரொளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பண பண பம்பண பறையொளி கூவிட கண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கெளரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி......."

பாடும் போதே என்னை அறியாமல அழுதுட்டேன். பின்னாடி திரும்பி பார்த்தால் தெருக் குழந்தைகளும் பெண்களும் அமைதியா நிற்கிறாங்க. பாட்டிக்கி ரொம்ப சந்தோஷம். வந்தவங்களுக்கு வெற்றிலை பாக்கும் பூவும் கொடுத்தாங்க. சுண்டல் எதுவும் பண்ணலை. நாளைக்கி கண்டிப்பா சுண்டல் செய்றேனு சொன்னாங்க.

இனி இருக்கும் கொலு நாளில் பாட சந்தர்பம் கொடுத்த பாட்டியின் ஆசிர்வாதத்தோடு மனசு பாராம் குறைந்ததுனு நான் சொல்லனுமா என்ன.

பாட்டிக்கி ரெண்டு பசங்க. யூ எஸ்ல இருக்காங்களாம். இங்க பாட்டி தனியா தான் இருக்காங்க. கேட்டு தெரிந்து கொண்டேன். இனி பாட்டிக்கு துணையா ரெண்டு வார்தை தினமும் பேசனும்னு முடிவு செய்திருக்கேன். சரிதானே.


.

Saturday 17 October 2015

கல்யாணமே வைபோகமே



சென்னை வட பழனி ஆபிஸில் வேலைக்காக காத்திருக்கும் போது தான் ராஜீ அறிமுகம் ஆனாள். எங்களுடன் இருந்ததில் வயது குறைந்தவளும் கூட.

என்னோடு இருந்த நான்கு நாளில் நல்லா பழக்கம் ஆயிட்டாள். டிப்ளமோ நர்ஸிங் முடித்தவள். வீட்டில் அம்மாவும் அக்கா முனியம்மா மட்டுமே. அப்பா இல்லை.

முனிமாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் விட்டுட்டு போயிட்டார். மீண்டும் வேறு ஒரு வருக்கு இவள் தான் முன் நின்று திருமணம் முடித்து கொடுத்திருக்காள். ராஜீயின் ஊர் கோவில் பட்டியில் சிறு கிராமம். அக்காள் முனிமாவின் மறுமணத்தால் உறவுக் காரங்க எல்லாம் விலகிட்டாங்க. குடும்ப பொருப்பு ராஜீயின் மீது. அக்காவின் கல்யாணக் கடன் நோயாளி அம்மா .

அப்பல்லோவில் எனக்கான வேலைக்கு ராஜீயை அனுப்பி வைத்தேன். பேஷண்ட் கவனிக்க.போனில் அப்ப அப்ப பேசுவாள். எதாவது சந்தேகம் கேட்கனும்னா கேட்பாள். கடைசியா ஆபிஸில் என்னோடு இருக்கும் போது பார்த்தது.

நான் தற்சமயம் கோவையில் இருக்கிறேன். ஐந்து ஆறு மாதங்கள் இருக்கும் ராஜீட்ட இருந்து போன். எப்பவும் போனில் பேசுவாள் ஆனா அன்னைக்கி கொஞ்சம் தயக்கமாவே சொன்னாள்.

"நான் ஒரு பையனை காதலிக்கிறேன் அக்கா. பேஸ் புக்கில் பழக்கம். நீங்க அவன்ட பேசுறீங்களா"னு கேட்டாள். எனக்கோ செமக் கோவம். முன்ன பின்னத் தெரியாத பார்க்காத பையனை எப்படி நம்பி லவ் பண்றேனு கோவப்பட்டேன்.

ஒரு நாள் அந்த பையனே போன் போட்டு என்னிடம் பேசினான். தன் வீட்டு சூழ்நிலை தன்னோட வேலை குறித்து எல்லாம் பேசினான். எனக்கு சந்தோசமா இருந்தது. என்னை அம்மா என்று தான் கூப்பிடுவான்.

நல்லதொரு நாளில் முறைப் படி பொண் கேட்டு திருமண நாள் குறித்தாச்சி. இத்தனைக்கும் மணப் பெண்ணின் போட்டோவை மட்டுமே தன் தாய் தகப்பனிடம் காட்டி உள்ளான். தன் பையனின் ஆசைக்கு மதிப்பு கொடுத்து கல்யாணத்திற்கு சம்மதித்தனர்.

என்னையும் தன் தாயாய் மதித்து கல்யாண பத்திரிக்கை மாடல் முதல் மூகூர்த்தப் பட்டு வரை வாட்ஸப்பில் அனுப்பி எனக்கு பிடித்ததையே தேர்வு செய்தார்கள்.

இருவருமே ஒரு வாரத்திற்கு முன்பே கல்யாணத்திற்கு வரச்சொல்லி அழைப்பு வைத்தார்கள். 28 ல் கல்யாணம் .ராஜீ 15ம் தேதி வரை சென்னையில் தான் இருந்தாள்.

கல்யாணத்திற்கு முதல் நாள் முன்னதாக போனேன் ராஜீயின் வீட்டுக்கு. சின்னதாய் ஒரே ரூம் மட்டுமே கொண்ட வீடு. அம்மா அக்கா அத்தான்னு நான்கு பேர் மட்டுமே கல்யாண வீட்டில்.

எத்தனையோ கல்யாணத்திற்கு என் கணவரோடு போய் இருக்கேன். இந்த கல்யாணம் கொஞ்சம் வித்தியாசமா தெரிந்தது எனக்கு.

முதல் நாள் பொண் அழைப்பு

எல்லாருமா சேர்ந்து சமையல் செய்தோம். பெண்ணுக்கு புடவை கட்டுவது முதல் சிகை அலங்காரம் வரை எல்லாம் முன் நின்று செய்தேன். என் கணவர் இறந்த பிறகு கலந்து கொண்ட முதல் விசேஷம் இது.

அந்த ஊரில் ஒரு பழக்கம் எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் பெண் அழைப்பு அன்று வீட்டின் முன் முற்றத்தில் ஊர் பெரியவர்களை இருக்க வைத்து மாப்பிள்ளை வீட்டில் இருந்து கொண்டு வந்த சீர் நிச்சயப்பட்டு பூ பழங்கள், அரிசி பெட்டி. பொதுவா பெண் வீட்டில் இருந்து தான் அரிசி பெட்டி கொடுப்பார்கள். சீர்களை பெரியவர்கள் சம்மதத்தில் ஊர் முன்னிலையில் மணப் பெண் விழுந்து கும்பிட்டு சீரைப் பெறுகிறாள். தலையாரி மணி ஓசையோடு மூகூர்த்த ஓலை வாசித்தார்கள்.

போட்டோவில் மட்டுமே பார்த்த மணமகனை முதல் முறையா நேரில் பார்த்ததும் சந்தோஷம்.

நல்லபடியா திருமணம் நடந்தேறியது. சந்தோஷமா இருந்தது. என்னை அவர்கள் வீட்டில் ஒருத்தியாய் நினைத்து அன்பு காட்டினார்கள்.

ஊர் ஊராய் தேடி பெண் பார்த்து கல்யாணம் செய்து வைத்த என் வீட்டில் கூட இந்த சந்தோஷத்தை நான் அனுபவிக்கவில்லை.

வாழ்த்துகள் ராஜ் கண்ணன். என்றும் என் அன்பும் ஆசியும் உங்களுக்கு உண்டு.

.

Thursday 15 October 2015

அடைக்கலமாய் வந்ததேனோ


          




அத்தனை பெரிய வீட்டில் எனக்கு பிடித்த
இடம் இந்த ஜன்னல் தான்.

கட்டில் மெத்தை அருகில் இருந்தாலும்
நான் துயில் கொள்ள விரும்பும்
இடம் இந்த ஜன்னல் தான்.

செண்பக பூவின் வாசனையில்
என்னை மறந்துறங்கும்
இடம் இந்த ஜன்னல் தான்.

எத்தனையோ இரவுகள்
தனிமையில் புலம்பி கழிக்கும்
இடம் இந்த ஜன்னல் தான்.

மழைச் சாராலில் என் கை நனைத்து நின்ற
இடம் இந்த ஜன்னல் தான்.

என் தனிமை அறிந்தே எனக்கு துணையாக
வந்த இளம் சிட்டுக்களே,
உங்களுக்கும் பிடித்த இடம்
இந்த ஜன்னல் தானோ?

வந்த ரெண்டொரு நாளில் தனக்கென
ஒரு கூட்டைக் கட்டி நீங்கள் செய்யும்
குறும்புகளை நான் ரசித்த வண்ணமாய்
உங்கள் மீது பொறாமை கொள்ளும்
இடமும் இந்த ஜன்னல் தான்.

ஒற்றைக் கம்பியில் கட்டிய கூட்டினை
களைந்தெரியத் துடிக்கும் கரங்களுக்கு
அரணாய் காத்திருப்பேன்
இந்த ஜன்னலிடமே.


நான் பார்த்த பிரசவம்


நாங்க இருப்பது மாடி வீடு. வெளியில என்ன நடந்தாலும் தெரியாது கேட்காது. ஏன்னா எங்க வீட்டு டீவி அவ்வளவு சத்தமா ஓடிக்கிட்டு இருக்கும்.

இரவு ஏழு மணிக்கெல்லாம் சாப்பாடு முடிஞ்சிடும். நான் சாப்ட்டு கொஞ்ச நேரம் மொட்ட மாடியில் நடப்பேன். அப்படி நடந்துக் கிட்டு இருக்கும் போது வெளி யில் ஒரே சத்தமா அங்கிட்டும் இங்கிட்டுமா கீழ் வீட்டு அக்கா பதட்டமா  ஓடிக்கிட்டு இருந்தாங்க.

மேலே இருந்து பார்த்த நான் "என்னக்கா என்ன விசயம் எதுக்கு எல்லாரும் பதட்டமா ஓடிக்கிட்டு இருக்கிங்க"னு கேட்டதற்கு அப்பறம் தான் தெரிந்தது பக்கத்து வீட்டு பொண்ணுக்கு இடுப்புவலி எடுத்திருக்குனு.

போன வாரம் தான் வளைகாப்பு வைச்சிருக்காங்க. இன்னும் பத்து நாள்ல டெலிவரி இருக்கும்னு டாக்டர் சொல்லிருக்காங்க.

ஆனா இன்னைக்கி திடீர்னு வலி வந்துட்டு. நான் போய் பார்க்கும் போது பொண்ணோட கணவ்ர் அவசர வேலையா டெல்லி போயிருக்கார். அந்த பொண்ணோட வயசான அம்மா மட்டும் தான் கூட இருக்காங்க.

பக்கத்து வீட்டுக்காரங்க ஆஸ்பிட்டலுக்கு போன் பண்ணியிருக்காங்க. ஆம்புலன்ஸ்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கும் போதே அந்த பொண்ணுக்கு ரொம்ப வலி வர ஆரம்பிச்சிட்டு.

நான் அவுங்க வீட்டுக்குள்ள போய் பார்க்க போனா அந்த பொண்ணு மாடியில இருக்கு. எல்லாரும் அங்க தான் இருந்தாங்க.அந்த பொண்ண கீழக் கூட்டிட்டு வர முடியலை.

வலியில் துடிச்சிக்கிட்டு இருந்துச்சி. உடனே அவுங்க அம்மாட்ட அடுப்படி எங்கம்மா இருக்குனு கேட்டு மசாலா பெட்டியக் கேட்டு வாங்கி கொஞ்சம் கிராம்பு, சீரகம், சோம்பு, மிளகு தட்டிப் போட்டு ஒரு கஷாயம் வைச்சி குடிக்கச் சொன்னேன்.

கஷாயம் குடிச்ச கொஞ்ச நிமிஷத்தில் அங்க இருந்தவங்களை வெந்நீர் வைக்கச் சொன்னேன். அடுத்த ஐந்தாவது நிமிஷம் தாய்கிட்ட இருந்து பிள்ளைய வாங்கி தொப்புள்  கொடி வெட்டி குளிப்பாட்டி துடைச்சி பாட்டி கையில் கொடுக்கும் போது தான் ஆம்பலன்ஸ் வந்தது.

எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். அப்பறம் எல்லாருமா சேர்ந்து ஆஸ்பிட்டலுக்கு அனுப்பி வைச்சோம்.

குழந்தை கொஞ்சம் எடை கம்மியா மஞ்சள் காமாலை இருக்குனு சொல்லி கண்ணாடி பெட்டியில் வைச்சிருக்காங்களாம்.

பாட்டி ஒரே அழுகை. சந்தோஷத்தில் தான். ரெண்டு உயிரையும் காப்பாத்திட்டேனு ஒரே பாராட்டு எனக்கு.

கல்யாணம் ஆகி ஆறேழு வருஷத்திற்கு பிறகு எங்கயோ மருந்து சாப்பிட்டு தறிச்ச குழந்தையாம். 

நல்லா இருக்கனும். இருக்கும். வாழ்த்துகள் பையா.

Tuesday 13 October 2015

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 7



கொலு வைக்கும் முதல் நாள் கும்ப பூஜை செய்வார்கள். மரப் பலகையில் மஞ்சளால் மொழுகி கோலம் இட்டு நடுவில் பால் குடம் எடுக்கும் போது வைத்திருப்பார்களே சின்னக் குடம் அதில் மஞ்சளில் நனைத்த நூலால் சுற்றி சந்தனம் குங்குமம் வைத்து குடத்தின் உள்ளே பச்சரிசி, வெல்லம், வெற்றிலை பாக்கு வைத்து குடத்தின் மேல் ஒற்றைப் படையா மாவிலை வைத்து அதன் மேல் குடுமியோடு உள்ள தேங்காயை வைத்து கொஞ்சம் பூ போட்டு பூஜை செய்ய வேண்டும். கலசத்தில் அம்மன் இருப்பதாக நினைத்து மேல் படியான ஒன்பதாவது படியில் வைத்து படி பூஜை செய்ய வேண்டும்.

நாவராத்திரியின் முதல் நாள் கீழ் படியில் இருந்து பொம்மைகளை வைக்க வேண்டும்.

“திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலு இருக்க வருக அலை மகளே வருக் ஐஸ்வர்யம் தருக.....”

“ராமக்கா வீட்டுக் கொலு எப்பவும் விசேஷமா தான் இருக்கும். இந்த வருஷம் கூட வெளியூருக்கு போனவள் வித விதமா கொலு பொம்மைகளை வாங்கிட்டு வந்திருக்காளாம். எல்லாம் சைனா பொம்மைகளாம். நேற்று மார்கெட்டில் பார்த்தவள் கொலு பார்க்க வரச் சொல்லி கூப்பிட்டாள். மறக்காம உன்னையும் கூட்டிட்டு வரச் சொன்னாள்” என்றபடி வந்தாள் சரசு.

“அடியே சரசு. அவுக வீட்டுக் கொலுவப் பற்றி சொல்லுதியே அதுல எதாவது உனக்கு விளங்குதா. நம்ம புவனா வீட்டு கொலுவை நீ பார்க்கனுமே என்ன அழகு. இன்னைக்கெல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம். அம்புட்டு அழகு. அந்த ராதை கிருஷ்ணன் பொம்மையப் பார்க்கனுமே நிஜத்துல ரெண்டு பேரும் கொஞ்சுகிற மாதிரி இருக்கும் அப்படி இயற்கையா அலங்கரிச்சி வைச்சிருப்பா. அது மட்டுமா மலையும், அதில இருந்து வழிந்தோடும் அருவியும் குற்றாலத்தை வீட்டுக்குள்ளேயே கொண்டு வந்திருப்பாள். மண்ணுல புல்லை முளைக்க வைச்சி அதுக்கு நடுவில பார்க்கை உருவாக்கி பிள்ளைகளை விளையாட விட்டு இருப்பா பாரு, நிஜத்துல கூட பார்க்க முடியாத விளையாட்டை எல்லாம் பார்க்கலாம். அந்த காலத்துல நீயும் நானும் விளையாண்ட விளையாட்டை இப்ப உள்ள பிள்ளைகளுக்கு புவனா வீட்டு கொலுவில தான் காட்ட முடியும். அப்படி அழகா வைச்சிருப்பா. சைனா பொம்மையாம் பெரிய சைனா பொம்மை. நம்ம வீட்டு பிள்ளைக குளத்துக் கரையில போய் மண்ணெடுத்து அதுக கையால செஞ்சி வைச்சிருக்கிற பொம்மைக்கு உண்டான அழகு அதுல இருக்குமா? சைனா பொம்மை பார்க்க மினு மினுப்பா அழகா கண்ணாடி மாதிரி மின்னினாலும் எனக்கென்னவோ மண்ணில் செய்த பொம்மைகளில் தான் ஒரு ஒற்றுதல் இருக்கு. நீ வேணுனா புவனா வீட்டு கொலுவுக்கு வந்து பாறேன். உனக்கே தெரியும்” என்றாள் மீனா.

“சரிக்கா நீ இவ்வளவு தூரம் செல்லுற . நீ கொலு பார்க்க போகும் போது மறக்காம என்னையும் புவனா வீட்டுக்கு எங்களையும் கூட்டிட்டுப் போக்கா” என்றவள் வசந்தி. இவர்கள் உரையாடலில் கலந்துக் கொண்டவள்.

சரி வசந்தி, இன்னைக்கி தான் கொலு வைக்கும் நாள். கண்டிப்பா உங்களையும் கூட்டிட்டுப் போறேன்.

புவனா வீடு. காலையில் அமாவாசை மூத்தோருக்கு திதிக் கொடுக்கும் நாள். மூத்தோரை வணங்கி கும்பிட்டு மதியத்திற்கு மேல் பிள்ளைகளின் வரவுக்காக காத்திருந்தாள்.

மதியம் மூன்று மணிக்கெல்லாம் தெருப் பிள்ளைகள் வர ஆரம்பிச்சிட்டாங்க. சரவணன் வரும் போதே பக்கத்து பள்ளி வாசல் காமெளண்டில் நிற்கும் மா மரத்தில் கொஞ்சம் கிளைகளை வெட்டி கொண்டு வந்திருந்தான். வாசலில் நூல் கட்டி, மா இலைகளை தோரணமா கட்டி தொங்க விட்டாச்சி. மா இலை தோரணம் மங்களத்தின் அடையாளமா காற்றில் ஆடுவதே ஒர் அழகு தான்.

இனி கலசப் பூஜை. சின்ன குடத்தில் அல்லது சொம்பில் மஞ்சளில் நனைத்த நூலைச் சுற்றி சந்தண பொட்டு வைச்சி மரப் பலகையில் கோலமிட்டு கலச சொம்பின் உள்ளே பச்சரிசி, வெல்லம், வெற்றிலை, பாக்கு, பழம், போட்டு அதன் வாய் பகுதியில் மாவிலையை ஐந்து அல்லது ஏழாக ஒற்றைப் படையா வருவதுப் போல் வைத்து அதன் மீது குடும்மியோடு உள்ள தேங்காயை கழுவி வைத்து சந்தணம் குங்கும பொட்டிட்டு மரப் பலகையில் வாசலில் வைத்து பூஜை செய்தாள்.

அம்மனை தன் வீட்டில் கொலு இருக்க வரவழைப்பதற்கே கலசப் பூஜை வைப்பதாய் புவனா பிள்ளைகளுக்கு சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மறக்காமல் வசந்தியையும், சரசையும் புவனா வீட்டு கொலுப் பார்க்க கூட்டிட்டு வந்தாள் மீனா.

வந்திருந்த அனைவருக்கும் சந்தணம் குங்குமம் கொடுத்து வீட்டுக்குள் அம்மனோடு எல்லாரையும் வரவேற்று உட்கார செய்து இனிப்பு வழங்கினாள்.

பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பூ கொடுக்கும் போது தான் குமார் கேட்டான், “ஏன் அத்தை எங்களுக்கெல்லாம் பூ கொடுக்க மாட்டிங்களா. எங்க அம்மா பூவைச்சி நா பார்த்ததே இல்லத்தே. நீங்க கொடுத்திங்கன்னா எங்க அம்மாவுக்கு கொண்டு கொடுப்பேன்த்தே”

குழந்தையா அவன் கேட்டாலும் புவனாவின் மனதை ஏதோ செய்தது. “உனக்கு இல்லாத்தாடா இந்தா வாங்கிக்கோ. கொண்டு போய் அம்மாவுக்கு கொடு. சரியா”

அடுத்து எனக்கு எனக்குனு கேட்ட எல்லாருக்கும் பூ கொடுத்து சந்தோஷப் பட்டாள்.

கலசத்தை மேல் படியான ஒன்பதாவது படியின் நடுவில் வைத்து படி பூஜை செய்தாள். இனி கொலுப் படியில் பொம்மைகளை வரிசைப் படி அடுக்க வேண்டியது தான். பொதுவா புவனா எல்லாவற்றையும் தானே செய்யனும்னு நினைக்க மாட்டாள். வந்திருக்கும் எல்லாரையும் பொம்மைகளை வைக்க சொல்லி அழகு பார்ப்பதோடு மறக்காமல் புகைப்படமும் எடுத்து வைத்தாள்.

கீழ் இருந்து மேலாக முதல் படியில் ஒர் அறிவு உயிரினமான புல், தாவரம், செடி, கொடிகளை வைக்க சொன்னாள். எதுக்கு அத்தை இதெல்லாம்னு கேட்டப் பிள்ளைகளுக்கு பொறுமையா பதில் சொன்னாள்.

“மண் தன்னில் விழுந்த விதையை உயிர்ப்பித்து விளைந்து விருட்சமாக்கி விதைகளாக விருத்தி செய்யும் ஈரத் தன்மை மண்ணிற்கு உண்டு. மண்ணில் விழுந்த எல்லா விதைகளுக்கும் முளைக்கும் சக்தியைக் கொடுத்தவள் இந்த மகா சக்தி. அதை நினைவு கூறவே முதலில் மண்ணில் விளைந்த தாவரங்களை முதல் படியில் வைக்கிறோம். மனிதனுக்கு மிகவும் முக்கியமான உணவும் தானியங்களும், தாவரமும் எனபதை உணர்த்தும்”.

ரெண்டாம் படியில் ஈறறிவு உயிரினமான சங்கு, நத்தை, சோளி முத்து, சிற்பிகளை வைக்கச் சொன்னாள். “இது எதற்கு”னு கேட்ட ராமுவுக்கு “நா சொல்லட்டுமா அத்தை”னு கேட்ட குழந்தை பார்வதியை பார்த்து “ம் சொல்லு” என்றாள் புவனா. “மனிதனுக்கு மிகவும் முக்கியமான தேவை என்றால் உணவும், தண்ணீரும். உணவு இல்லாமல் கூட இருந்து விடுவான். ஆனால் தண்ணீர் இல்லாமல் இருக்க முடியது. நமக்கு தேவையான தண்ணீரையும் கொடுத்து அதில் வாழும் உயிரினங்களையும் படைத்த அம்மைக்கு காணிக்கையாய் சங்கையும், மணி மாலைகளையும் வைக்கிறோம்”.

புவனாவே அசந்து போனாள். அது மட்டுமில்லாமல் கொலுவில் இருக்கும் அம்மன் விளையாடுவதற்காக பல்லாங்குழியும், சோளி முத்துக்களையும் வைப்பதாகச் சொன்னாள்.

மூன்றாம் படியில் மூன்றறிவு உயிரினமான எறும்பு, புற்று பொம்மைகளையும், நான்காம் படியில் நான்கறிவு உயிரினமான வண்டு போன்ற பறக்கும் பொம்மைகளை வைக்கச் சொன்னாள். எறும்பும், வண்டுகளும் யார் உதவியும் நாடாமல் தனக்கு தேவையான உணவை தானே தேடிக் கொள்ளும். தங்குவதற்கு தேவையான இருப்பிடத்தையும் தாங்களாகவே அமைத்துக் கொள்ளும் திறனை கொடுத்தவள் மகாசக்தி.

“ஐந்தாம் படியில் ஐந்தறிவான விலங்கு பொம்மைகள் சரி தானே அத்தை?”. செல்விக்கு தான் என்ன அறிவு. “ஆமாம் செல்வி நீ சொல்லுவது சரி தான்”.

“அப்போ ஏழாவது படியில் நாம தானே அத்தை”

“டேய் என்னடா சொல்லுற” நாம எப்படிடா?” வெகுளியா கேட்ட மாரியை பார்த்து எல்லாரும் சிரித்தனர்.

“அடேய் கடவுள் நமக்கு ஆறறிவு கொடுத்திருக்கார்டா”

“அப்படியா எனக்கு தெரியாதே”

ஹ்ஹ்ஹாஹா... புவனாவுக்கு சிரிப்பு வந்தது.

“மாரி.. புல்லுக்கும், சிற்பிக்கும் ஏன் விலங்குக்கும் கொடுக்காத சக்தியை கடவுள் நமக்கு கொடுத்திருக்கார்டா. அது தான் நாம பேசும் சக்தி”

“ஓவ் ஆமால்ல”

“இங்க பாரு ஆமாவா இல்லையா. ஒழுங்கா சொல்லு”

“டேய் ஆமாம் டா” வேடிக்கையும் சிரிப்புமாய் ஆறாம் படியில் மனிதப் பொம்மைகள் வைச்சாச்சி.

இனி ஏழாவது படி. மனிதனாகப் பிறந்து தெய்வீக நிலையை அடைந்த மகான்களின் பொம்மைகளை வைக்கனும்.

“அப்போ முனிவர்கள் பொம்மையை தானே வைக்கனும் அத்தை”

“ஆமாம் டா”

எட்டாம் படியில் தேவர்கள். நவகிரக பொம்மைகளை வைக்கனும். ஒன்பதாவது படியில் அம்மன், சிவன் பார்வதினு மும்மூர்த்திகள் அவர்களின் தேவியரோடு இருக்கும் பொம்மைகளை வைக்கனும். ஒன்பது படியிலும் ஒன்பது விதமான பொம்மைகளையும் வைத்தாச்சி. இனி மரப் பாச்சி பொம்மை, செட்டியார் பொம்மைகளை வைக்கனும்.

பொம்மைகளை எல்லாம் படியில் அடிக்கிக் கொண்டே அது ஏன் அப்படி வைக்கனும் எதுக்கு வைக்கிறோம்னு ஒவ்வொன்னுக்கும் ஒரு அர்த்தம் சொல்லி வைப்பதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த சரசுக்கு ராமக்கா வீட்டு கொலு ஞாபகத்தில் வந்து போனது.

ராமக்கா வீட்டில் கொலு பார்க்க நல்லா அழகா தான் இருக்கும். ஆனா அலங்கார கொலுவா தான் தெரியும். புவனா வைக்கிற கொலுவில் எத்தனை நேர்த்தி, அன்பு, பாசம் எல்லாம் கலந்துல்ல இருக்கு. ராமக்கா எதையும் தொட விட மாடாள். அதாவது பரவாயில்லை. பொம்மைகளுக்கு எதாவது ஆயிடும்னு நினைக்கலாம். கொலு பார்க்க வருகிறவங்க கிட்ட சிரிச்சிக் கூட பேச மாட்டாளே. அப்படியே பேசினாலும் அதில பணக்காரத்தனம்மில்ல இருக்கும்.

“ஆமாம்டீ வசந்தி கொலு வைக்கிறதே இவ்வளவு அழகா இருக்கே”

கொலு படியின் ரெண்டு பக்கங்களிலும் குத்து விளக்கை வைத்து திரிப் போட்டு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினாள் புவனா.

செட்டியார் பொம்மைகளை வித விதமா எடுத்து வைத்து அவர்களின் முன் வியாபார கடையை விரித்து வைத்தாள். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை சொல்லாமல் சொல்லியது அவர்களின் கடைகள். மண் பாண்டம் செய்பவர்கள் முதல் கம்யூட்டர் வரை தொழிலாகக் கொண்ட தொழிலார்கள் பொம்மைகளை அதற்கு என்று ஏற்ற இடத்தில் அழகா வைத்தார்கள்.

மனிதனாகப் பிறந்த நமக்கு உடல் வலிமை, (சக்தி) செல்வம், கல்வி, அவசியம். சக்தி கொடுக்கும் துர்க்கையையும், செல்வத்திற்கு லெட்சுமியையும், அறிவு ஆற்றலுக்கு சரஸ்வதியையும் வணங்குவோம்.

இனி வரும் ஒன்பது நாட்களும் எல்லாரும் கொலுப் பார்க்க வாங்கனுச் சொல்லி வெற்றிலைப் பாக்குடன் மஞ்சள் குங்குமம் கொடுத்து சந்தோஷமாக அனுப்பி வைத்தாள் புவனா.

தயவு செய்து உங்கள் வீட்டுக் கொலுவுக்கு எல்லாரையும் பார்க்க வர விடுங்கள். வருவோரிடம் அன்பாய் இன் முகத்தோடு பேசுங்கள். எல்லாருமே அம்மனின் அம்சமே.


- முற்றும்

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 1

Saturday 10 October 2015

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 6



"பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி கொடுத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ"

எல்லா உயிர்களையும் படைத்த பரமனுக்கே சக்தி கொடுத்தவள் பராசக்தி. மண்ணுக்கும், கல்லுக்கும் உயிர் கொடுத்து நம்மையெல்லாம் ஆள்பவளும் அவளே.

ஐயப்பாவும், மாரியும் மண்வெட்டியும் கூடையுமா ஆற்றங்கரைக்கு போய் ஆற்று மணலும், கரையில் உள்ள புற்களையும் வட்ட வட்டமா வெட்டி கொண்டு வந்தார்கள்.

“எதுக்கு அத்த ஆற்று மணல். இதை வைச்சி என்ன செய்யப் போறீங்க?” அப்பாவியா கேட்ட ஐயப்பனைப் பார்த்து மாரி “ஏலே இன்னைக்கு அத்த கொலு வைக்கப் போறாங்கல அதான். இது கூடத் தெரியாம தான் மண் அள்ள வந்தியா?” என்றான்.

“அது தெரியும்ல. ஆனா மண்ணும், புல்லும் எதுக்குனுக் கேட்டேன்?”

“இந்த மண்ணுல தான் சின்னப் பொம்மைகளை அழகா அடுக்கி வைப்பாங்கடா”

“அதுக்கு தான் படி வைச்சிருங்காங்கல. அதுல தானே பொம்மைய வைக்கனும்”

“உனக்கு ஒன்னும்மே தெரியலை, அத்தைட்டக் கேளு எல்லாம் சொல்லுவாங்க பாரு” என்றான் மாரி.

மண். இந்த மண்ணில் தான் புல் பூண்டு, நத்தை, புழு, ஊர்வன, பறப்பன, நடப்பனனு எல்லா உயிர்களும் பிறக்கிறது. பிறந்த உயிர்களுக்கு எல்லாம் சக்தி கொடுத்து காப்பவள் தாய் என்பதை உணர்த்துவதற்கே கொலு வைக்கிறோம்.

ஐயப்பன் கொலுவைப் பற்றி அறியாதவன். மாரிக்கு நல்ல சிநேகிதன். மாமாவின் மகனும் கூட. ஸ்கூல் லீவில் வந்த நண்பனை கொலு பார்க்க கூட்டிட்டு வந்தான். வந்தவனுக்கோ ஏமாற்றம்.

“என்னடா கொலு வைப்பாங்கனே ஆனா ஒன்னையும் காணும்?”

“இருடா அவசரப் படாதே. இனி தான் கொலு வைக்க ஆரம்பிப்பாங்க”

இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே ரவி, சரண்யா, மீனா, சுடலை, கோவிந்தன், பானு, சுந்தரி, செல்வி, கலா, ஆறுமுகம் எல்லாருமாக வருவதைப் பார்த்ததும் மாரி முகத்தில் சந்தோஷம். எல்லாரிடமும் தன் நண்பன் ஐயப்பனை அறிமுகப் படுத்தினான்.

மாரியை மட்டும் நண்பனா கொண்ட ஐயப்பனுக்கு இன்று புதியதாய் கிடைத்த நண்பர்களை பார்த்து சந்தோஷப்பட்டான். எல்லாருமாக சந்தோஷமா பேசி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டைக் கழுவி சுத்தம் செய்து வீட்டு வேலைகளை முடித்த ராதை விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளிடம் வந்தாள். அதுவரை அமைதியா விளையாடியவர்கள் ஓஓஒனு ஒரே சத்தம் சந்தோஷத்தில்.

“அத்தை எப்போ கொலு வைப்பிங்க”னு கேள்வி மேல் கேள்விக்கு பதில் சொல்லியவாறு அவர்களை அழைத்தாள்.

“வாங்க கொலுவுக்கு எல்லாதையும் ரெடி பண்ணுவோம்”

முதலில் கொலுப் படியை ராமுவும், பீட்டரும் தான் தூக்கி கொண்டு வந்தார்கள். ராதை கை காட்டிய இடத்தில் வடக்கு நோக்கி கொலு படியை வைத்தார்கள். சரண்யாவும், மீனாவும் கலர் பேப்பர்களை எடுத்துக் கொடுக்க கோவிந்தனும் ஆறுமுகமும் ஸ்டூல் மேல் ஏறி நின்று கொண்டு கொலு வைக்கும் ஹாலை அலங்கரித்தனர். செல்வியும், கலாவும் சுவரின் ஓரங்களில் ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்தார்கள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த ஐயப்பன் “எதுக்கு ப்ளாஸ்டிக் தாளை இங்க விரிக்கிங்க”னு கேட்டதும் “இதுக்கு மேல தான் ஆற்று மணலைக் கொட்டனும். அப்ப தான் தரை வம்பா போகாது”னு பெரிய மனுஷி போல் சொன்னாள் சுந்தரி.

கலர் பேப்பரில் பூக்கள் செய்து சுவரின் பக்கத்திற்கு ஒன்றாக ரவியும், மீனாவும் அலங்கரித்தனர். வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஐயப்பனுக்கோ தானும் எதாவது செய்யனும்னு ஆசை வரவே ரவியிடம் “டேய் எனக்கும் சொல்லி தாடா நானும் செய்றே”னு சொல்லி அவனும் அழகான பூ கூடை செய்து அசத்தினான்.

கோவிந்தனும் ,சுடலையும் ஸ்பீக்கர் செட்டை ஜன்னலில் அங்கும் இங்குமா கட்டினார்கள். ஊற வைத்த கேழ்வரகு விதையை பார்க் அமைக்க மணலில் அழகா வரிசையா போட்டு மணலில் மூடி வைத்தாச்சி. இன்னும் ரெண்டு நாளில் முளைத்து விடும். அடுத்ததா கொலு படி. படியில் சுத்தமான வெள்ளைத் துணியை விரித்து வைத்து படி தெரியாமல் முடி பின் பண்ணியாச்சி. கலர் பேப்பராலும், ஜிகினா பேப்பராலும் அலங்காரம் செய்து சீரியல் லைட்டும் மாட்டியாச்சி.

படிக்கு ரெண்டு பக்கமும் குத்து விளக்கையும் எடுத்து வைச்சாச்சி. “எப்போ பொம்மைகளை எடுத்து வைப்பிங்க அத்தை” . கேட்ட ஐயப்பனிடம் “இன்னும் ரெண்டு நாளில் அமாவாசை . அன்னைக்கு தான் பொம்மைகளை வைக்கனும்” என்றாள்.

“ஏன் அன்னைக்கு வைக்கனும் இன்னைக்கு வைக்கக் கூடாதா?”

“அமாவாசை அன்று வளர் பிறை நாள். அன்னைக்கி தான் அபிராமி பட்டருக்கு அம்மன் முழு நிலவா காட்சி கொடுத்த நாள்”

“அமாவாசையில் முழு நிலவா?”

“நம்பிக்கை வைத்தால் நிலவு மட்டும் என்ன அந்த அம்மனே வருவாள்”

“இன்னும் ரெண்டு நாள் இருக்கு கொலுப் படியில் பொம்மைகளை வைக்க. எல்லாரும் மறந்துடாம வந்துடுங்க. சரியா?”



“ஓகே அத்தை” உற்சாகத்தோடு குதித்தோடும் குழந்தைகளை பார்த்துக் கொண்டே நின்றாள்.

Wednesday 7 October 2015

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 4



எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. பாளையங்கோட்டை தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். தாமிரபரணி தண்ணீர் குடித்து வளர்ந்தவள். பொதுவா சொல்லுவாங்க கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்னு. பாளையங்கோட்டையைப் பொருத்த வரை கோயிலுக்குப் பஞ்சமே கிடையாது. தடிக்கி விழுந்தா கோயில்கள் தான். நெல் காத்த நெல்லையப்பர் முதல் ராமர், கிருஷ்ணர், கோபாலன், பிள்ளையார்,முருகர்னு கோயில்கள் நீண்டுக்கிட்டேப் போனாலும் அம்மன் கோயிலுக்கு தனி சிறப்பு உண்டு.

அம்மன் கோயில்னா ஒன்னு ரெண்டு கோயில் இல்லைங்க. ஒரே பெயரில் ரெண்டு மூணு கோயில்களும் உண்டு. ஆனா அக்கா தங்கைகள்னுச் சொல்லி ஏழு பேர் ஊருக்குள்ள இருந்து அருள் புரியும் அழகே தனி தான்.

பெரியவள் ஆயிரத்தாள், அடுத்து பேராச்சி . இவள் மட்டும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமர்ந்து பேராத்துச் செல்வி என்கிறப் பெயரில் ஆற்றுக் கரையில் குடியிருக்கும் மக்களுக்கு துணையா இருக்காள்.

அடுத்து மூணாவதா முப்பிடாதி. நாலாவதா உலகம்மா. ஐஞ்சாவதா முத்தாரம்மா, ஆறாவதா உச்சினிமாகாளி, ஏழாவதா கடைக்குட்டி தூத்துவாரி அம்மன்னு அக்கா தங்கச்சிக்குள்ள இருக்கிற ஒற்றுமையப் பார்க்கனுமே. அதிலும் நவராத்திரி வந்துட்டாப் போதும் அக்கா தங்கைகளுக்குள் இருக்கும் சந்தோஷத்தை ஒண்ணா ஒரே நேரத்தில் பார்க்க காண கண் கோடி வேண்டும்.

புரட்டாசி மாத அமவாசை வளர் பிறை முதல் நாளில் ஆற்றங்கரையில் இருக்கும் பேராச்சியை தவிர மற்ற தங்கைகளான முப்பிடாதி, உலகம்மா, முத்தாரம்மா, உச்சினிமாகாளி எல்லாரும் அக்கா ஆயிரத்தாள் வீட்டுக்கு படை சூழ வருவார்கள். கடைக் குட்டி தங்கை தூத்துவாரி பெரியவள் ஆயிரத்தாள் பக்கத்திலே இருப்பதால் அவளை அழைத்துக் கொண்டு அக்கா தங்கைகள் சிவப் பெருமாளை வழிப்பட்டு நகர்வலம் வருவார்கள். விடிய விடிய சந்தோஷத்தை களிப்பில் விளையாடி கழித்து விடிந்ததும் அவர் அவர் வீடுகளுக்கு செல்லும் அழகை சொல்லி மாழாது.

அமவாசை முதல் நாளில் ஒன்று ரெண்டு அல்ல பத்து சப்பரத்தில் பத்து பேரா விளக்கு அலங்காரமும், பூ அலங்காரமுமா வரும் அழகே அழகு தான். பேராச்சி அன்னைக்கு மட்டும் தனித்து தன் ஊர் ஜனங்களோடு அவள் இருக்கும் இடத்திலே நகர்வலம் வருவாள்.

பத்து சப்பரமா அது எப்படினுக் கேட்டா அக்கா தங்கைகளையும் நம் மக்கள் தத்து எடுத்து தனியா அசைவம், சைவம்னு பிரிச்சிட்டாங்கல்ல.

அமாவாசை அன்று காலையில் நேர்த்திக் கடனா பால் குடம் எடுப்பார்கள். எல்லாக் கோயில்ல இருந்தும் சின்னப் பிள்ளைகள் முதல் பெரியவங்க வரை ஒன்று மாத்தி ஒன்றா கொட்டு மேளத்தோடு வரும் போது பார்க்க அழகா இருக்கும். அன்று எல்லா அம்மனுக்கும் சந்தனங்காப்பு அலங்காரம் செய்வார்கள். மாலையில் சப்பரத்தில் வந்த அம்மனை கொலு வைக்கும் கொலு மண்டபத்தில் பூ அலங்காரத்தில் லைட் அலங்காரமும் சேர்த்துப் பார்க்கும் போது அப்படியே நம்மை மறந்து அவள் காலடியில் கொஞ்ச நேரம் அமர தோன்றும்.

இறைவன் உலகத்தை படைக்க விரும்பிய போது இச்சை (ஆசை) சக்தி தோன்றியதாம். அவனே எப்படி படைக்கலாம் என எண்ணும் போது தோன்றியது தான் ஞான சக்தி (அறிவு). இறைவன் உலகத்தைப் படைத்தது (அருள்) கிரியா சக்தி.

அமவாசையின் மறுநாள் வரும் முதல் மூன்று நாள்களும் அம்மனை இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கை அலங்காரம் செய்வாங்க. அடுத்து வரும் மூன்று நாள்கள் அதாவது நாலாவது ,ஐந்தாவது, ஆறாவது தசரா நாளில் அம்மனை கிரியா சக்தியான லெஷ்மியின் அலங்காரம் இருக்கும். ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது நாட்கள் ஞானசக்தியான சரஸ்வதியின் அலங்காரம் செய்வார்கள். மகிஷாசூரன் என்ற அசுரனை ஒன்பது ராத்திரி போராடி ஒன்பதாவது நாள் அவனை வதம் செய்த நாள் தான் தசராவின் நோக்கமே. நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். நவராத்திரி என்பதை நவரத்தினமா மின்னும் அம்மனை சொல்லலாம்.

இதையெல்லாம் விட ஒன்பதாவது நாள் பேராச்சி அம்மன் அக்கா வீட்டுக்கு வரும் அழகே தனி தான். ஆமாங்க. கொட்டு மேளத்தோடு வருஷத்தில் ஒரு நாள் வரும் தங்கைக்கு பெரிய அக்காவான ஆயிரத்தாள் உடுத்தும் உடையில் இருந்து போட்டுக்கும் நகை, பூ அலங்காரம், லைட் அலங்காரம்னு கொட்டு மேளத்தோடு வரவேற்கும் அழகைப் பார்க்க காணக் கண்கோடி வேண்டும். ஒன்பதாவது நாள் மாரி அம்மன் கோயில் மைதானத்தில் வைத்து நடக்கும் சம்காரத்தைப் பார்க்கனுமே. சைவ சாமிகள் எல்லாம் வேடிக்கைப் பார்க்க அசைவ சாமிகள் எல்லாம் சூரனை வதம் செய்வார்கள். சூரனைக் கொன்ற களைப்பில் அவர் அவர் வீடுகளுக்கு சென்று கையில் குடதோடு ஆற்றில் குளிக்க புறப்பிட்டு விடுவார்கள். தங்கை பேராச்சிக்கு அக்கா ஆயிரத்தாள் ஐஞ்சி வகை கட்டுச் சோறுக் கட்டி அனுப்பி பின்னாலே தானும் உடன் சென்று ஆற்றில் நீராடி தங்கை பேராச்சி வீட்டில் எல்லா தங்கைகளும் பகல் முழுதும் தங்கி இரவில் வீடு திரும்புவார்கள். கையில் குடத்து நீருடன் கூந்தலை விரித்தவண்ணம் வீடு திரும்பும் அழகோ அழகு. அன்று இரவு சூரனை வென்ற சந்தோஷத்தில் பூம் பல்லாக்கில் ஊர்வலம் .பிறகு என்ன சந்தோஷக் களிப்பில் இனி வரும் நாள்கள் ஊஞ்சல் திருவிழா தான்.

என்ன தான் குலசேகரப் பட்டணத்தில் தசரா கொண்டாடினாலும் எனக்கு என்னவோ பாளையங்கோட்டை தசரா தான் பிடிக்கும். தசரா வந்துட்டாலே சாதி மதம் இல்லாமல் திருவிழாக்களை கண்டு மகிழ்வார்கள். கடை கடைக்கு செய்திருக்கும் லைட் அலங்காரத்தைப் பார்க்கவே ஒரு கூட்டம் கூடும். ஊருக்கு மத்தியில் சப்பரம் நிற்பதற்காக பெரிய பந்தல் போட்டு அதில் பெரிய போர்டு போட்டு இருப்பாங்க. எந்த கோயிலில் என்ன ஸ்பெஷல் அதாவது கும்மி, கோலாட்டம், பாட்டுக் கச்சேரி, கரகாட்டம், வில்லுனு எழுதிப் போட்டுருப்பாங்க. யாருக்கு எதுப் பிடிக்குமோ அதை விரும்பி ரசிப்பார்கள்.

தசரா அன்று மொத்தம் பதினொரு சப்ரம் பேராச்சியையும் சேர்த்து புறப்படும். தங்கைகளை முன் விட்டு பின்னால் பெரிய அக்கா ஆயிரத்தாள் வரும் அழகே அழகு.

(அம்மன் வருதப் பாருங்கடி. அவா அசைந்து வர்றதப் பாருங்கடி)





ஒரு மனிதனுக்கு தேவையான கல்வி, செல்வம், வீரம் அனைத்தையும் தர வல்ல அம்மனை வணங்குவோம்.




- தொடரும் 




நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 1
நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 2
நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 3

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 5



ஒரு மாலை வேளை. உதிர்ந்த மல்லிகை மலர்களை தொடுக்கும் நேரம் இரண்டு தேவதைகளோட நடமாட்டம். யாரதுன்னு பாத்தா மலரும் , பானும் தான்.

“வாங்கப்பா எப்படி இருக்கீங்க. பார்த்து ரொம்ப நாளாச்சி. ஸ்கூலுக்கு போயிட்டு வந்துட்டிங்களா?”

“இல்ல அத்தை. இப்போ ஸ்கூல் லீவு. காலாண்டு பரீட்சை முடிந்து லீவு விட்டுட்டாங்க”. சொன்ன பானுவின் காதில் மலர் எதோ சொல்ல நீயே கேளுனு அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

“என்னப்பா உங்களுக்குள்ளே பேசிக்கிறீங்க. என்னனு சொன்னா நானும் கேட்டுப்பேன்ல. என்னடா அது ரகசியம். வாங்க முதல்ல கிட்ட வந்து உட்காருங்கடா”

“இல்ல அத்த. இவா சொல்லுதா உங்கள இப்போ பார்த்தா பயமா இருக்குனு”

“யே....ய். நீயும் தானே சொன்னே. இப்போ என்னைய மட்டும் சொல்லுதே”

இரண்டு சின்ன வாக்குவாதம் செய்வதும் அழகு தான்.

“இல்லத்த, நீங்க முன்னாடி எல்லாம் பார்க்க அழகா எப்பவும் சிரிச்சிக்கிட்டு இருப்பிங்க. ஆனா இப்போ உங்க கிட்ட வரவே பயமா இருக்குத்தே”

“எதுக்குப்பா பயப்படுறீங்க. பயப்படாதிங்க. நா உங்க அத்தை தானே, எதுக்கு பயம்?

“இல்ல அத்த ராமு, செந்தில், ரவி, உஷா, கவிதா எல்லாரும் உங்க வீட்டுக்கு வரப் பயப்படுறாங்க. எங்களுக்கும் கொஞ்சம் பயமா தான் இருந்துச்சி. ஆனா உங்களைப் பார்த்ததும் சரியாயிட்டு. மாமா செத்ததை நாங்கப் பார்த்தோம் அத்தை. எனக்கு காய்ச்சலே வந்துட்டு”

“எனக்கும் தான் அத்தை. அப்புறம் ஊசியெல்லாம் போட்டு தான் சரியாச்சி”

கள்ளம் கபடம் இல்லாமல் பேசும் குழந்தைகள் கண் முன் நிகழும் மரணம் எத்தனை கொடியது. நான் எப்படி சொல்வேன். மாமா சதிகாரர்களின் கொலையால் கடவுளிடம் போயிட்டார் என்று. அள்ளி முடியாத கூந்தலும், புன்னகை இல்லா என் முகம் பார்க்க பயப்படும் குழந்தைகளிடம் என் நிலையை எப்படி விளக்குவேன்?

பானு தான் முதலில் கேட்டாள்.

“அத்தை கொலு எப்போ வைப்பிங்க? நாங்க தினமும் உங்க வீட்டத் தூரமா நின்னுப் பார்ப்போம். ஆனா உங்க வீடு பூட்டியே இருக்கும். இனி மாமா வர மாட்டாங்களா அத்தை. நீங்க இப்படியே தான் இருப்பிங்களா அத்த?”. கேட்கும் ரெண்டு பேருக்கும் ஆறேழு வயது தான் இருக்கும்.

எங்க வீடு, எங்க அத்த வீடு, எங்க மாமா வீடுனு உரிமையோடு வந்து விளையாடும் குழந்தைகள் இன்று உங்க வீடுனு தனியா பிரித்து சொல்லும் போது மனசு வலிக்க தான் செய்தது. ஒரு மரணம் சீக்கிரத்தில் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது.

கட்டிய மலர்களை ரெண்டு பேருக்கும் சூடி விட்டு “சரிப்பா வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வரும் போது ரவி, ராமு, கவிதா, உஷா செல்வி எல்லாரையும் கூட்டிட்டு வாங்க. அத்தை எல்லாரையும் தேடினேன்னு சொல்லுங்க என்ன”

பானுவும் மலரும் கடைசியா கேட்ட கேள்விக்கு என்னப் பதில் சொல்ல என தெரியாமல் இருக்கும் போது தான் பக்கத்து தெருவில் இருக்கும் அம்மன் கோயில் நியாபகத்திற்கு வந்தது. இந்த குழந்தைகள் ஆசை என்றும் தடைப்படக் கூடாது.

வேலைக்கு போயிட்டு வந்த பெரியவனிடம் மாடியில் இருக்கும் கொலு பொம்மைகளை கீழே இறக்கச் சொன்னேன். எதுவும் புரியாமல் விழித்தவன் பின் “கொலு வைக்கப் போறீங்களாமா”னு கேட்டவனிடம் “நானே கொலுவில் இருக்கும் போது எப்படிடா அதெல்லாம். இந்த பொம்மைகளை எல்லாம் பக்கத்து தெருவில் இருக்கும் கோயிலில் கொண்டு கொடு” என்றேன்.

சின்ன சின்னப் பொம்மைகளை வந்திருந்த குழந்தைகளுக்கு பரிசா கொடுத்துட்டு அம்மன் கோயில்ல நாளையில இருந்து கொலு வைப்பாங்க போய் பார்க்கச் சொன்னேன். கோயில் பூசாரி முதலில் சம்மதிக்கவில்லை. கூட்டி பெருக்குவதில் இருந்து கோலம் போடுவது வரை தெரு பிள்ளைகள் சம்மதித்ததும் ஒத்துக்கிட்டார். சின்னக் கோயில் தான். அவ்வளவா வருமானம் வராது. ஆனா இன்று என் தெருக்காரப் பிள்ளைகளால் கொலுவில் பேர் வாங்கி நிற்குது. அதை நினைக்கையில் இப்போ பெருமையா இருக்குது.


- தொடரும் 


நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 1
நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 2
நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 3
நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 4

Sunday 4 October 2015

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 3



எங்க வீட்டுக் கொலு எப்பவுமே குதூகுலமாவும், சந்தோஷமாவும், அமர்க்களமா இருக்கும். ஏன்னா கலந்துக்கிற எல்லாருமே பத்து பதினைந்து வயது குழந்தைகள்.

நாங்க இருக்கிற ஏரியாவில் எல்லாருமே அன்றாடம் வேலைக்கு போய் களைத்து வருபவர்கள். அவுங்களுக்கு கொஞ்ச நேரம் கூட தன் பிள்ளைகளோட சந்தோஷமா இருக்க நேரம் கிடைக்காது. நவராத்திரின்னாலோ, கொலுன்னாலோ எதுவும் தெரியாதவர்கள். என்ன சரஸ்வதி பூஜைனா சுண்டல், சர்க்கரைப் பொங்கல் வைப்பாங்கனு மட்டுமே தெரிஞ்சவுங்க.

முதல் முதலா நான் கொலு வைச்சப்போ எனக்கு சரியா யார்கிட்டயும் பேசி பழக்கம் கிடையாது. கடைக்கு வருகிறப் பிள்ளைகள்ட என் கணவர் தான் விளையாட்டா சொல்லுவார். எங்க வீட்டுல கொலு வைச்சிருக்கோம். உனக்கு தெரியுமானு சின்னப் பிள்ளைகள்ட சின்னப் பிள்ளை மாதிரி சொல்லுவார்.

கொலுவா..? அப்படினா என்ன மாமானு வெகுளியா கேட்கும் குழந்தைகளை வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் கொலு வைத்திருக்கும் அழகைக் காட்டுவார். அவருக்கும் கொலுவைப் பற்றி அப்போ சரியா தெரியாது. ஆனா குழந்தைகளுக்கு அங்கு இருக்கும் பொம்மைகளைக் காட்டுவதில் அவ்வளவு சந்தோஷம்.

கொலுவைப் பார்த்த குழந்தைகள் பார்வையில் அங்கு கடவுளையோ, பக்தியோ தெரியல. எதோ அழகழகா இருக்கும் பொம்மைகள் மட்டும் தான் தெரிந்தது. குழந்தைகள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். என் கணவரோ தினமும் பார்க்க வாங்கனு அனுப்பி வைச்சார்.

ஸ்கூலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்த பிள்ளைகள் ஸ்கூல் பேக்கை வீட்டில் போட்டுட்டு தன் வீட்டில் இருந்த விளையாட்டுக் கார்,பந்து, பொம்மைகள் எல்லாத்தையும் தூக்கிட்டு வந்து அத்தை இந்த பொம்மைகளையும் இங்க வைக்கலாமானு கேட்கும் போது எனக்கு அழுகையே வந்துட்டு.

பிள்ளைகள் எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் அவுங்க கொண்டு வந்த பொம்மைகளை அவுங்க கையாலே கொலுவில் வைக்கச் சொன்னேன். ஆஹா அவுங்களுக்கு தான் எவ்வளவு சந்தோஷம்.

சரி... எல்லாரும் வீட்டுக்குப் போய் யூனிபாம் மாற்றிட்டு கொஞ்ச நேரம் விளையாடிட்டு அப்புறமா வாங்கனு அனுப்பி வைச்சா யாருக்குமே போக மனசே இல்ல. இந்த பிள்ளைகளுக்கு எதாவது செய்யனும்னு நானும் என் கணவரும் முடிவெடுத்தோம்.

ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒரு திறமையை வளர்க்கனும் அதுக்கு இந்த கொலுவை ஆதாரமா வைக்கனும்னு நினைச்சேன்.

எல்லாப் பிள்ளைகளுமே கொஞ்சம் கஷ்டப்பட்ட பிள்ளைகள் தான். அதனால நானே கொஞ்சம் கலர் பேப்பர், குண்டூசி, குட்டி ப்ளாஸ்டிக் குடம், பந்து, மரச் சட்டம், கலர் ரிப்பன், எம்பிராய்ட் நூல் எல்லாம் வாங்கி கொடுத்து அவுங்க அவுங்களுக்கு திறமையப் பொருத்து சின்ன சின்ன கைப் பொருள்களை செய்ய சொல்லிக் கொடுத்தேன்.

அவுங்க செய்த பொருட்களை கொலுவில் வைக்கச் சொன்னதும் எல்லாப் பிள்ளைகளும் சந்தோஷமாவும், உற்சாகமாவும் பொறுமையாவும். செய்ய ஆரம்பிச்சாங்க.

பிரேமா மரச் சட்டத்தில் பெயிண்ட் பண்ணி வெஸ்ட் நவதானிய வால்கேங்கிங், செல்வி ஐந்தாவது படிப்பவள் ப்ளாஸ்டிக் குடத்தில் வெள்ளியும், தங்கமும் தோற்கும் அளவுக்கு கும்பக் குடம் அப்படினு நிறைய பொருட்கள் செய்தார்கள்.

சின்னக் குழந்தை ரம்யாவும், பாலாவும் பொம்மைக் கேட்டு வீட்டில் அழுத போது தான் அவுங்க அம்மாவுக்கு எங்க வீட்டில் கொலு இருப்பதே தெரியும்.

ரம்யாவின் அம்மா கொத்த வேலைக்கு போறவங்க. வீட்டில் இருந்த கொலுவைப் பார்த்துட்டு அப்படியே உருகி போய் கும்பிட்டு அழுதாங்க. உடனே கடைக்கு போகும் போது பத்து ரூபாய்க்கு ஒரு பெண் தலையில் சுமை தூக்கி வைச்சிருப்பது போல் ஒரு பொம்மை வாங்கிட்டு வந்துக் கொடுத்துட்டு கண்ணீர் மல்க அடுத்த வருஷம் நா நல்லா இருந்தேன்னா என்னால முடிஞ்ச பொம்மைகளை வாங்கி தாறேன்னு சொல்லி கும்பிட்டு போனாங்க. அதோடு தெருவில் இருக்கும் எல்லார்ட்டையும் கடைக்காரக்கா வீட்டுல கொலு வைச்சிருக்காங்க. வாங்க எல்லாரும் போவோம்னு கூட்டிட்டு வந்து என்னை சந்தோஷத்தில் திக்கு முக்காட செஞ்சிட்டாங்க.

அது மட்டுமா தினமும் ஆள் ஆளுக்கு பூ பழம் பலகாரம் கொண்டு வந்து வீட்டை கோயிலாவே ஆக்கிட்டாங்க. கொலுவில் வேண்டிக்கிட்டா நல்லது நடக்கும்னு நம்பினாங்க. இன்னைக்கும் சுந்தரி தனக்கு குழந்தை பிறந்தா பொம்மை வாங்கி தாறேனு சொன்ன நடராசர் அவுங்க பேர் சொல்லிக்கிட்டு இருக்கு. "கல்யாணியே கபாலி காதல் புரியும் இந்த நல்லாசி வைத்த எந்தன் நாயகியே"


- தொடரும்


நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 1

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 2

Saturday 3 October 2015

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 2



இரவு மணி பத்து. குமார் ஆசாரி தான் எதோ இருப்பு கம்பியில் தட்டிக் கொண்டு இருந்தார்.

“என்ன அண்ணே இவ்வளவு நேரத்துக்கு பிறகு வந்து என்ன செய்றீங்க?”

“நீங்க கொலு வைக்க கொலு படி கேட்டிங்கல்ல அதான். அண்ணன் கூப்பிட்டு விட்டாங்க”

“அது சரி இருப்பு கம்பியில என்ன செய்றீங்க?”

“ஒவ்வொரு வருஷமும் மரப் பலகையில செய்றதை பத்திரப் படுத்த கஷ்டமா இருக்குனு அண்ணன் தான் ஸ்டீல்ல செய்ய சொன்னாங்க. இனி தேவையானப்போ உபயோகிச்சிட்டு மற்ற நேரத்தில் கழட்டி வைச்சிக்கிடலாம்கா”

“சரி.... எங்க உங்க அண்ணனைக் காணும்?”

“ஸ்குரு வாங்க கடைக்கு போயிருக்காங்க அக்கா”

“இவ்வளவு நேரத்துக்கு அப்புறம் எப்படி வீட்டுக்கு போவீங்க? வீட்டுல உங்க வீட்டுகாரங்க தேட மாட்டாங்களாண்ணே. நாளைக்கு வந்து செஞ்சி கொடுக்கலாம்ல”

“இன்னைக்கு வரை வேலையே இல்லாம தான் இருந்தேன். காலையில தான் ஒரு வேலை வந்தது. நாளையிலே இருந்து அங்க போய்ட்டா வர முடியாது. அதான் இப்பவே முடிச்சிக் கொடுத்துடலாம்னு வந்தேன்”

“சரிண்ணே. சாப்பிடுறீங்களா? இல்ல காபி எதாவது போட்டுத் தரட்டுமா?”

“இல்லக்கா. நான் விரதம் இருக்கேன். தசரா முடியிற வரைக்கும் எங்கேயும் சாப்பிட மாட்டேன். குலசைக்கு காளி வேஷம் போடப் போறேன். நாற்பது நாள் விரதம்க்கா”

“காளி வேஷமா? அதுக்கு ரொம்ப கட்டுப்பாடா இருக்கனுமேண்ணே. எத்தனை வருஷமா போடுதிங்க?”

“சின்ன வயசில அம்மை நோய் வந்து ரொம்ப கஷ்டப்பட்டேன். பிழைச்சதே அந்த காளி புண்ணியத்தில் தான். அப்போ தான் எனக்கு வருஷா வருஷம் காளி வேஷம் போடுறதா அம்மா வேண்டிக்கிட்டாங்க. இந்த வருஷத்தோட முப்பது வருஷம் ஆகுது”

“நா சின்னப் பிள்ளையா இருக்கேல பூதத்தார்னு ஒருத்தர் மட்டும் தான் காளி வேஷம் போடுவார். அவர் காளி வேஷம் போட்டு வர்றதைப் பார்க்க ஒரு கூட்டமே காத்திருக்கும். அப்படியே அம்மனே நடந்து வர்ற மாதிரி வருவார். நீண்ட ஜடையும், துருத்திய நாக்கும், எடுப்பான கண்ணும், சிங்கப் பல் அதுவுமா கையில் சூலாயுதத்தோடு ஜல் ஜல்னு நடந்து வரும் போது அப்படியே ஜனங்கள் எல்லாம் மெய்மறந்து நிற்போம். எங்களை அறியாமலேயே கைகள் ரெண்டும் தன்னாலே கும்பிடும். அப்படி ஒரு பரவசம் இருக்கும். அவர் மேல் சாமி வந்து ஆடும் போது ஐயோ சொல்லவே பயமா இருக்கு. அப்படி ஒரு ஆவேசம் இருக்கும். கொஞ்ச நேரம் தான் பார்க்க முடியும். ஆனா இப்ப எல்லாம் யாரைப் பார்த்தாலும் வேஷம் போட்டுக்கிட்டு சாமி மேல உள்ள பயமே போயிட்டு. அதிலேயும் அம்மன் வேஷத்தைப் போட்டுட்டு வீதி வீதியா ஏன் கடை கடையா உண்டியலை குலுக்கிட்டு காணிக்கை பிரிக்கிறேனு அலையும் போது எனக்கெல்லாம் கோவமா வரும். அதிலும் ஒவ்வொரு கடையில காணிக்கை இல்லைனு விரட்டும் போது பார்க்க கொடுமையா இருக்கு”

“என்னப் பண்ணக்கா. ஒரு சிலர் காசுக்காக காணிக்கை என்கிறப் பேர்ல பிச்சை எடுக்கிறாங்க. ஆனா எல்லாரும் அப்படி கிடையாதுக்கா. நானெல்லாம் நாற்பது நாளும் கடுமையா விரதம் இருப்பேன். தரையில் தான் படுப்பேன். ஒரு நேரம் தான் சாப்பாடு. ரெண்டு வேளை குளிப்பேன். நவராத்திரி முடியிர வரைக்கும் வெளியூர் எங்கேயும் போக மாட்டேன். கடைசி தசரா அன்னைக்கு சப்பரம் கிளம்பும் போது தான் வேஷமே போடுவேன்”

கடைக்கு போன சொக்கன் ஸ்க்ருவோடு கலர் கலரா பெயிண்ட் டப்பாக்களை மீனாவின் கையில் கொடுத்தான்.

“என்னதுங்க இது. நான் கேட்டப்ப கொலு வைக்க வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ என்னடானா எனக்கே தெரியாம குமார் அண்ணன வரச் சொல்லி இருக்கிங்க. இப்போ பெயிண்ட் டப்பா எல்லாம் வாங்கிட்டு வந்துருக்கிங்க?”

“நான் வேண்டாம்னு சொன்னாலும் தெருப் பிள்ளைகள் விடுரதா இல்ல. நீ வீட்டுக்கு போனதும். பால்காரக்கா மகா செல்வி வந்தாள். என்ன மாமா அத்தைய எங்கேனு கேட்டா. நடந்ததை சொன்னேன். சண்டைக்கு வந்துட்டா. என்ன மாமா. நாங்க எல்லாம் எப்படா தசரா வரும். அத்தை கொலு வைப்பாங்கனு இருக்கோம்ன்னா. இல்ல செல்வி அத்தைக்கு கஷ்டமா இருக்குமேனு தான் வேண்டாம்னு சொன்னேன்னேன். நாங்கெல்லாம் இருக்கும் போது அத்தைய கஷ்டப்பட விடுவோமா. நீங்க கொலு படி மட்டும் செஞ்சி கொடுங்க . மற்றதெல்லாம் நாங்க பார்த்துக்கிடுதோம்னு சொல்லிட்டா. சரி ஏன் இந்த சின்னப் பிள்ளைகள் ஆசையக் கெடுப்பானேனு கடைக்கு போகும் போதே குமார் அண்ணனப் பார்த்து பேசி வரச் சொல்லிட்டேன்”

அப்பாடா அந்த கருமாரி எதோ ஒரு வகையில எனக்கு அருள் புரிஞ்சிட்டா. இந்த வருஷ கொலுவுக்கு நீங்க எல்லாரும் வீட்டுக்கு வந்துடுங்க. "எல்லார்க்கும் எல்லாமும் வேண்டும் அருள் புரிவாள் நல்லாசி வைத்த எந்தன் நாயகியே"



- தொடரும் 

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 1

நவராத்திரி கொலு (தசரா) - பாகம் 1



“என்ன மீனா ஏன் என்னவோப் போல் இருக்க. உடம்புக்கு எதுவும் முடியலையா . முகம் எல்லாம் வாடிப் போய் இருக்கு”. கடை வியாரத்தை கவனித்துக் கொண்டே மனைவியைப் பார்த்துக் கேட்டான் சொக்கன்.

“இல்லங்க. இந்த குமார் ஆசாரிய நேற்றே வரச் சொன்னேன். இன்னும் வரலை. அதான்”

“குமாரையா ஏன் எதுக்கு? என்ன வேலையா வரச்சொன்னே?”

“இன்னைக்கு தேதி ரெண்டாயிட்டு இன்னும் ஒன்பது நாள் தான் இருக்கு நவராத்திரிக்கு. போன வருஷம் செய்த கொலுப் படியை மழையில் நனைய விட்டு மரப் பலகையெல்லாம் வீணாயிட்டு. அதான் புதுசா செய்ய சொல்லிருந்தேன்”

“குமார் காலையிலே வந்தார். எதாவது வேலை இருக்கானு கேட்டதுக்கு நான் தான் இப்ப ஒரு வேலையும் இல்ல. இருந்தா கூப்பிடுதேனு சொல்லி அனுப்பிட்டேன்”

“ஏங்க இப்படி பண்ணுனிங்க. எங்கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டு இருக்கலாம்மில்ல. அவர்ட போன் கூடக் கிடையாதே. எப்படி கூப்பிட?”

“ஏன் மீனா இந்த வருஷம் கண்டிப்பா கொலு வைக்கனுமா. நீ தனியா இருந்து எப்படி எல்லா வேலையும் செய்வே. இந்த வருஷம் வேண்டாமே. பிள்ளைகள் எல்லாம் இருந்தா உனக்கு உதவியா கொஞ்சம் வேலையப் பார்ப்பாங்க. நீ தனியா இருந்து வீட்டக் கழுவி விளக்கு தேய்த்து படி அலங்காரம் செய்யனும். அது போக தினமும் வருகிறப் பிள்ளைகளுக்கு சுண்டல், பூ, பருப்புனு கொடுக்கனும். எதுக்கு நீ தனியா கிடந்து கஷ்டப்படனும். இது காணாதற்கு நான் இல்லாதப்ப கடையையும் கவனிக்கனும். வேண்டாம் மக்கா. கொலு அது இதுனு கஷ்டப் படாதே”

“இல்லைங்க. கொலு வைக்கிறது எனக்கு ரொப்ப பிடிக்கும்ங்க. தயவு செய்து வேண்டாம்னு சொல்லாதிங்க. கொலு வைக்கிறது வீட்டுக்கும், மனசுக்கும் சந்தோஷமா இருக்கும்ங்க”

“நான் சொல்லுரதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம். சரி சரி..... கொஞ்சம் கடையப் பார்த்துக்கோ. நான் போய் கடைக்கு வேண்டிய சாமான்களை வாங்கிட்டு வாறேன். என்னவெல்லாம் வாங்கணும்னு பார்த்து எழுதி வை. நான் இப்போ வாறேன்”னு சொல்லிட்டு வண்டியை எடுக்கப் போனான் சொக்கன்.

கடைக்கு தேவையான சாமான்களை ஒரு பேப்பரில் எழுதி இருந்த பணத்தையும் சில்லரையும் எண்ணி பையில் போட்டு சொக்கனிடம் கொடுத்து அனுப்பினாள் மீனா.

மீனா கொடுத்த பையை வாங்கி கொண்டு வண்டியை ஸ்டாட் செய்து மொத்தக் கடையை நோக்கி பயணித்தான்.

சின்ன வயசில் இருந்தே கொலு வைப்பது மீனாவுக்கு ரொம்ப பிடிக்கும். அப்பா இறந்த பிறகு பொங்கல், தீபாவளினு எந்த பண்டிகையும் அம்மா கொண்டாட மாட்டாள். ஆனா எல்லாரும் பொங்கலுக்கு வீட்டை வெள்ளை அடித்தால் அம்மா நவராத்திரிக்கு வீட்டை வெள்ளை அடிப்பாள். கோயில்ல கால் நட்டிட்டா வீட்டில் எந்த வித அசைவ உணவும் செய்ய மாட்டாள். ஊரில் இருக்கும் கொழுந்தன் பிள்ளைகளை வரவழைத்து வித விதமா ஜடை அலங்காரம் செய்து அழகு பார்ப்பாள். பட்டு பாவாடைக் கட்டி நீண்ட முடியில் குஞ்சம் வைத்து தாழம்பு தைத்து அழகு செய்வாள்.

சாயங்காலம் ஆயிட்டா போதும் பிள்ளைகள் எல்லாம் வீடு வீடுக்கு கொலு பார்க்க கிளம்பி விடுவார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பிள்ளைகள் அலங்காரமா செல்வார்கள். கிருஷ்ணர், ராதைனு பக்க கொண்டை வைத்து மீனாட்சி அலங்காரம் மீனாவுக்கு ரொப்ப பிடிக்கும். அம்மா போட்டு விடும் கொண்டையில் பாசி மணிகள் தொங்க கண்ணக் கண்ணை உருட்டிக்கிட்டு போய் நிற்பார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் அழகழகா படி வைச்சி பொம்மைகளை அடிக்கி வித விதமா கலர் பேப்பரில் தோரணைகள் கட்டி பச்சை புல்லில் பாத்திக் கட்டி நடுவில் பொம்மைகளை வைத்திருக்கும் அழகைப் பார்க்கும் போது மீனாவுக்கும் நம்ம வீட்டில் கொலு வைக்கனும்னு ஆசையா இருக்கும்.

சின்ன வயசிலே அம்மன் பாட்டு, கிருஷ்ணர் பாட்டுனா ரொம்ப பிடிக்கும். அதிலும் கற்பக வல்லியின் பொற்பதங்கள் பிடித்தேன், நற் கவி அருள்வாய் அம்மா...பாட்டு அப்பவே அருமையா பாடுறியேனு அவளை பாத்து சொல்லுவாங்க.

"ஏன் இந்த மெளனம் அம்மா ஏழை எனக் அருள நான் இந்த மானிலத்தில் நாடுவ தாரிடமோ" இந்த வரியை படிக்கும் போது அப்படியே சாட்சாத் அம்மனிடம் உரிமையா கேட்பது போல் உணர்வு மீனாவுக்குள் இருக்கும்.

கொஞ்சம் பெரியவளா வளர்ந்ததும் கொலு வைக்கும் வீட்டில் எப்படி கொலு வைக்கனும். அதுக்கு என்னவெல்லாம் செய்யனும்னு கேட்டு வைத்தாள். கிடைக்கிற காசை எல்லாம் சேர்த்து வைச்சி கொலு பொம்மைகள் வாங்கி அம்மாவுக்கு தெரியாமல் ரெங்கு பெட்டிக்குள் மறைத்து வைப்பாள். நவராத்திரி நாள் வரும் போது அம்மாட்ட கேட்டு அலமாரியில் வைத்து பூஜை செய்வாள். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைத்த பொம்மைகளை எல்லாம் கல்யாணம் ஆனதும் புகுந்த வீட்டுக்கு கொண்டு வந்துட்டாள்.

மீனாவின் கணவருக்கு அவள் மேல் பாசம் அதிகம். அதனால் கொலு வைப்பதில் எந்த கஷ்டமும் இல்லாமல் இத்தனை வருஷம் வைச்சிட்டு வந்தாள். என்னவோ தெரியலை இந்த முறை வைக்க வேண்டாணு சொல்லுறார். எல்லாம் அவள் மேல் உள்ள அக்கறைனு தெரியுது. ஆனா அது தான் சந்தோஷம்னு தெரியலையேனு கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு.

கடைக்கு போய்ட்டு வந்த சொக்கன் வாங்கி சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டே மீனாவை வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கச் சொன்னான்.

வீடு ஒன்னும் அவ்வளவு தூரத்தில் இல்லை. கடையோடு சேர்ந்தே தான் வீடு . வீட்டுக்கு வந்த மீனா விளக்கு ஏற்றி சாமியைக் கும்பிட்டாள். எப்படியாவது கொலு வைத்து உன்னை கும்பிட நீ தான் அம்மா அருள் செய்யனும்னு சொல்லி கும்பிட்டு கட்டிலில் இருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.

மீனாவை வீட்டுக்கு அனுப்பி வைத்த சொக்கன் மீனாவை நினைத்து வருத்தப் பட்டான். கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்தில் மீனா தனக்குனு எதையுமே கேட்டதில்லை. கேட்கும் படி வைச்சதும் இல்லை. ஆனா இன்னைக்கு அவள் கேட்டதற்கு நாம மறுப்பு சொன்னது அவளுக்கு வருத்தம் இருக்கும். நான் எனக்காகச் சொல்லவில்லை. மகள் பூமா இருக்கும் வரை எதோ கொஞ்சம் உதவி செய்வாள். அவளையும் இந்த வருஷம் தான் கட்டிக் கொடுத்தேன். பெரியவன் சுரேஷ் எப்பவும் அம்மா பிள்ளை. நவராத்திரி வந்துட்டாப் போதும் இருக்கிற ஸ்பீக்கர் ஸ்செட்டை எல்லாம் ஜன்னல் கம்பி, வாசல்னு கட்டி விடுவான். கலர் பேப்பரில் வித விதமா தோரணைகளை கட்டி தொங்க விடுவான். வெளியில் எங்கு போனாலும் பார்க்கிற பொம்மைகளை வாங்கிட்டு வந்து அலங்கரிப்பான். சின்னவன் ரமேஷ் எப்பவும் எதிலும் ஒட்டுவதில்லை. ஆனா தேங்காய் துருவி கொடுப்பதில் இருந்து கொழுக்கட்டைக்கு பூரணம் வைத்து பிடித்து கொடுப்பது வரை எல்லாம் செய்வான். தெருவில் உள்ள அத்தனை குழந்தைகளும் நம்ம வீட்டில் தான் இருப்பார்கள். வீடே அமர்க்களமா இருக்கும். எனக்கும் கொலு வைப்பதில் சந்தோஷம் தான் . ஆனா இன்னைக்கு பெரியவன் வேலைக்காக வெளியூர் போயிட்டான். சின்னவனுக்கோ ஒரு நாள் விட்டு ஒரு நாள் டூட்டி. மீனா தனியா இருந்து கஷ்டப்படக் கூடாதேனு நினைச்சேன். ஆனா இப்போ கவலைப் பட வைச்சிட்டேனேனு சொக்கன் தனக்கு தானே வருத்தப் பட்டான்.

தூங்கிக் கொண்டு இருந்த மீனா எதோ டம் டம்னு சத்தம் கேட்டு விழித்தாள். எங்க இருந்து சத்தம் கேட்கு? எல்லாம் கடையில் இருந்து தான் சத்தம் வ்ருது. இவ்வளவு நேரத்திற்கு பிறகு என்ன செய்றார்னு கடைக்கு போய் பார்த்தா குமார் ஆசாரி தான் எதையோ அடித்துக் கொண்டிருந்தார்.



- தொடரும்